மனைவியை அடித்த சின்னத்திரை நடிகர் கரண் மேஹ்ரா கைது

By செய்திப்பிரிவு

இந்தி சின்னத்திரையில் பிரபலமான நடிகர் கரண் மேஹ்ரா அவரது மனைவியை அடித்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

'யே ரிஷ்தா க்யா கேஹ்லதா ஹாய்' என்கிற தொடரின் மூலம் பிரபலமானவர் கரண் மேஹ்ரா. இவரது மனைவி நிஷாவும் சின்னத்திரை நடிகையே. இருவரும் இணைந்து 'நச் பலியே' நடன நிகழ்ச்சியிலும், பல்வேறு தொடர்களிலும் தோன்றியுள்ளனர்.

திங்கட்கிழமை இரவு கரண் மேஹ்ராவின் வீட்டில் அவர் மனைவி நிஷாவை அடித்துள்ளார். சுமார் 11 மணி அளவில் கோர்கவான் காவல் நிலையத்துக்கு மேஹ்ராவின் வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதன் பிறகு அவரது வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். அவரது மனைவி நிஷா ரவால் இந்த புகாரைக் கொடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலை மேஹ்ரா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஒருவரை அடித்தல், அரசு அதிகாரியைக் கடமை செய்ய விடாமல் காயப்படுத்துதல், கோபத்தைத் தூண்டுவதற்கென்று வேண்டுமென்றே அவதூறாகப் பேசுதல், அச்சுறுத்தல் எனப் பல்வேறு பிரிவுகளில் மேஹ்ராவின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்தச் சண்டையில் நிஷாவுக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தன் மனைவியே தலையைச் சுவரில் முட்டிக்கொண்டதாக மேஹ்ரா கூறியுள்ளார். மேலும், நிஷாவுக்கு இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder) பிரச்சினை இருப்பதாகவும் மேஹ்ரா கூறியுள்ளார்.

நிஷா தனக்கு அந்தப் பிரச்சினை இருந்தது உண்மைதான் என்றும், ஆனால் தான் தற்போது தெளிவாக இருப்பதாகவும், கணவர் மேஹ்ராவே தன்னை அடித்ததாகவும் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE