மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் அர்ஜுன்?

By செய்திப்பிரிவு

மகேஷ் பாபு நடித்து வரும் 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் வில்லனாக அர்ஜுன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று முடிவுற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை.

இந்தப் படத்தின் வில்லன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இதில் அர்ஜுன் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுனுக்கு படத்தின் கதை மிகவும் பிடித்திருப்பதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.

கரோனா அச்சுறுத்தல் முடிந்து தொடங்கப்படவுள்ள அடுத்தகட்டப் படப்பிடிப்பில் மகேஷ் பாபு - அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE