'பூமிகா' இயக்குநர் இயக்கத்தில் சித்தார்த்

By செய்திப்பிரிவு

ரதீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடிக்கவுள்ளார் சித்தார்த்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் சித்தார்த். தெலுங்கில் 'மஹா சமுத்திரம்', தமிழில் 'டக்கர்', 'இந்தியன் 2', 'சைத்தான் கா பச்சா', 'நவரசா' (ஆந்தாலஜி) ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த்.

நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார் சித்தார்த். 'காதலில் சொதப்புவது எப்படி', 'ஜில் ஜங் ஜக்', 'அவள்' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தனது தயாரிப்பில் அடுத்த படத்தைத் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் புதிய படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கவுள்ளார். இவர் முன்பாக 'இது வேதாளம் சொல்லும் கதை', 'பூமிகா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே இன்னும் வெளியாகவில்லை.

'நவரசா' ஆந்தாலஜியில் ரதீந்திரன் இயக்கியுள்ள படத்தில் நடித்திருப்பவர் சித்தார்த். அவருடைய இயக்கம், கதை சொல்லும் விதம் ஆகியவை பிடித்திருந்ததால், ரதீந்திரன் இயக்கும் அடுத்த படத்தைத் தயாரித்து நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE