தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்ட ப்ரணீதா சுபாஷ்

தொழிலதிபர் நிதின் ராஜுவைத் திருமணம் செய்துகொண்டார் ப்ரணீதா சுபாஷ்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகையாக வலம் வருபவர் ப்ரணீதா சுபாஷ். 'உதயன்', 'சகுனி', 'மாஸ்', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இந்தியில் 'பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா' மற்றும் 'ஹங்கமா 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் 2017ஆம் ஆண்டு வெளியான 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' தான் இவர் நடித்த கடைசிப் படமாகும். அதற்குப் பிறகு தமிழில் சரியான கதைகள் அமையாததால் இதர மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று (மே 30) தொழிலதிபர் நிதின் ராஜுவைத் திருமணம் செய்துகொண்டார் ப்ரணீதா சுபாஷ். இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ப்ரணீதா சுபாஷின் திருமணம் காதல் திருமணமாகும். நிதின் ராஜு - ப்ரணீதா சுபாஷ் இருவருமே நீண்ட காலமாகவே உற்ற நண்பர்களாக இருந்துள்ளனர். பின்பு காதலர்களாகி, இருவரது வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

ப்ரணீதா சுபாஷின் திருமணத் தகவல் வெளியானவுடன், பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE