ஆஸ்கர் 2022 மார்ச் மாதம் நடக்கும்: மீண்டும் டால்பி தியேட்டரில் நடத்தத் திட்டம்

By பிடிஐ

2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பிப்ரவரிக்கு பதிலாக மார்ச் மாதத்தில் நடத்த அகாடமி முடிவு செய்துள்ளது. முன்னதாக 27 பிப்ரவரி திட்டமிடப்பட்டிருந்த இந்த விழா தற்போது மார்ச் 27இல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விருதுகளுக்காகப் பரீசிலிக்கப்படும் தேதி எப்போதும் போல டிசம்பர் 31 என்றே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக கரோனா நெருக்கடி நிலவி வந்ததால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. மேலும், பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. இதனால் நடந்த முடிந்த ஆஸ்கர் விருது விழாவுக்கு மட்டும் சில தளர்வுகளை அகாடமி அறிவித்திருந்தது. இதில் பரிசீலனைக்கான தேதி பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் 'ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா' உள்ளிட்ட சில திரைப்படங்கள் விருதுப் பரிந்துரைக்குத் தகுதிபெற முடிந்தன.

இன்னும் கரோனா நெருக்கடி முடியவில்லை என்பதால் அடுத்த வருட ஆஸ்கர் விருதுக்கும் ஓடிடி மற்றும் கட்டணம் செலுத்தி வீட்டில் பார்க்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்ட திரைப்படங்களும் தகுதி பெற முடியும்.

இம்முறை லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன்ஸில் நடந்த விழா, அடுத்த ஆண்டு, வழக்கமாக நடக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரிலேயே நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அகாடமி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE