விஜய் படத்தை உறுதி செய்த வம்சி 

By செய்திப்பிரிவு

விஜய் படத்தை இயக்கவுள்ளதை இயக்குநர் வம்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், சென்னையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

நெல்சன் இயக்கி வரும் இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. ஆனால், விஜய் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'மகரிஷி' தெலுங்குப் படத்தை இயக்கியவர் வம்சி. அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய்யைச் சென்னையில் சந்தித்து கதையொன்றைத் தெரிவித்துள்ளார் வம்சி.

அந்தப் படம்தான் விஜய்யின் அடுத்த படமாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகின. அதனைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும், இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், யாருமே உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள்.

தற்போது இயக்குநர் வம்சி அளித்துள்ள பேட்டியில், விஜய் படத்தை இயக்கவுள்ளதை முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பேட்டியில், "விஜய் படத்தை இயக்கவிருப்பது உண்மைதான். தில் ராஜு தயாரிக்கவுள்ளார். எனது படங்களிலேயே பெரும் பொருட்செலவில் தயாராகவுள்ளது" என்று தெரிவித்துள்ளார் வம்சி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE