சுதந்திரப் போராட்ட வீரர் வினாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கைக் கதை, திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தை மகேஷ் மஞ்சரேகர் இயக்குகிறார்.
சாவர்க்கரின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது. படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 'ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர்' என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சந்தீப் சிங் மற்றும் அமித் பி.வாத்வானி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ரிஷி வீர்மணி மற்றும் மகேஷ் மஞ்சரேகர் இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர்.
இந்தப் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்திருக்கும் தயாரிப்பாளர் சந்தீப் சிங், "ஒரே அளவு போற்றப்படும், விமர்சிக்கப்படும் நபர் வீர் சாவர்க்கர். இவரைப் பற்றி இன்று பல வித்தியாசமான கருத்துகள் உள்ளன. அதற்குக் காரணம் இவரைப் பற்றிச் சரியாகத் தெரியாததுதான். நமது சுதந்திரப் போராட்டத்தில் இவருக்கு முக்கியமான பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரது வாழ்க்கை மற்றும் பயணத்தைப் பற்றிய கண்ணோட்டத்தைத் தர நாங்கள் முயல்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.