'குஷி'க்கு வேறொரு கிளைமாக்ஸ்: ரசிகருக்கு பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யா

By செய்திப்பிரிவு

'குஷி' படம் தொடர்பான ரசிகர் ஒருவரின் பதிவுக்கு, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பதிலளித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'குஷி'. தேவா இசையமைப்பில் வெளியான இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். 2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

விஜய்க்குத் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. பாடல்கள், காட்சியமைப்புகள் என இப்படம் இப்போதும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. எப்போது தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டாலும், 'குஷி' தொடர்பான பதிவுகளை சமூக வலைதளத்தில் காணலாம்.

நேற்று (மே 27) கே டிவியில் 'குஷி' திரையிடப்பட்டது. இதனால் பலரும் 'குஷி' படம் தொடர்பான பதிவுகளை வெளியிட்டனர். அப்போது பயனர் ஒருவர் "செல்போன் இருந்திருந்தால் 15 நிமிஷம் முன்னாடியே 'குஷி' படம் முடிஞ்சிருக்கும். ரயில்வே ஸ்டேஷன் சீன்லாம் வந்தே இருக்காது" என்று எஸ்.ஜே.சூர்யாவைக் குறிப்பிட்டுப் பதிவிட்டார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக எஸ்.ஜே.சூர்யா, "அப்படி எல்லாம் இல்லை. மன வலியில் இரண்டு பேருமே செல்போனைத் தொலைத்துவிட்டதாகக் காட்டினாப் போச்சு. நண்பர்களுக்கு மாறி மாறி போன் செய்தால், அவர்கள் "சிவா ஸ்டேஷனுக்குப் போய்விட்டான், ஜெனி ஸ்டேஷனுக்குப் போய்விட்டாள்" என்று சொல்வார்கள். அவ்வளவுதான். எது கிளைமாக்ஸ் காட்சியோ, அதற்கு ஏற்ப காட்சியை பில்டப் பண்ண வேண்டியதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் இந்தப் பதிவுக்குக் கீழ் பலரும் 'குஷி 2' எடுங்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE