கரோனா அச்சுறுத்தல்: 'மாநாடு' பாடல் வெளியீடு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலால், 'மாநாடு' படத்தின் பாடல் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. இதர காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், வெங்கட் பிரபுவின் தாயார் மறைவால் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 'மாநாடு' படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், கரோனா இரண்டாவது அலை தீவிரத்தால், படக்குழுவினர் பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பேரிடர்க் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும் கரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழலில் இரக்கமற்று 'மாநாடு' படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். ஊரடங்கு முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி".

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE