ஓடிடியில் வெளியாகும் கடைசி விவசாயி

By செய்திப்பிரிவு

மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி விவசாயி' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'கடைசி விவசாயி' படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இதனை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார்.

'கடைசி விவசாயி' படத்தின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் இளையராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். கருத்து வேறுபாட்டால் அவர் விலகவே, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இந்தப் படத்தின் விநியோக உரிமைக்காக, நீண்ட மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதற்குப் பிறகு கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

தற்போது, 'கடைசி விவசாயி' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. அமேசான், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களுக்குப் போட்டியாக சோனி லைவ் நிறுவனமும் விரைவில் களமிறங்கவுள்ளது. இதற்காக தமிழ்த் திரையுலகில் பல முன்னணிப் படங்களை வாங்கியுள்ளது. அதில் 'கடைசி விவசாயி' படமும் ஒன்று.

விரைவில் 'கடைசி விவசாயி' படக்குழுவினர் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE