'சர்காரு வாரி பாட்டா' தொடர்பான வதந்தி: மகேஷ் பாபு தரப்பு விளக்கம்

By செய்திப்பிரிவு

’சர்காரு வாரி பாட்டா’ தொடர்பான வதந்திக்கு, மகேஷ் பாபு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று முடிவுற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை.

கடந்த ஆண்டு மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா பிறந்த நாளான மே 31-ம் தேதி அன்று, இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே போல், இந்த ஆண்டு மே 31-ம் தேதி அன்று 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனத் தகவல் வெளியானது.

இதனை மகேஷ் பாபு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வந்தார்கள். இது தொடர்பாக மகேஷ் பாபு தரப்பிலிருந்து சிறு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

"நாம் ஒவ்வொருவரும், நமது சமூகமும் எதிர்கொண்டு வரும் தற்போதைய சூழலை மனதில் கொண்டு, 'சர்காரு வாரி பாட்டா' குறித்த எந்தவொரு செய்தியையும் வெளியிட இது சரியான நேரம் இல்லை என்று அதன் தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர்.

இது குறித்த பொய்யான, அதிகாரபூர்வமற்ற செய்திகள் எதையும் பரப்ப வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தான் முதலில் தகவல்கள் பகிரப்படும். அது வரை பாதுகாப்பாக, கவனமாக இருங்கள்"

இவ்வாறு மகேஷ் பாபு தரப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE