ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவன தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருந்த நடிகர் கார்த்திக் ஆர்யன் தற்போது அந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, தொழில்முறையாக சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதால் ’தோஸ்தானா 2’ திரைப்படத்திலிருந்து கார்த்திக் ஆர்யனை கரண் ஜோஹார் வெளியேற்றினார். தற்போது, ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்த, இயக்குநர் அஜய் பல்லின் படமான ’குட்பை ஃப்ரெட்டீ’யிலிருந்து கார்த்திக் ஆர்யன் அவராகவே விலகியுள்ளார்.
இயக்குநருடனான கருத்து வேறுபாடு காரணமாகவே கார்த்திக் ஆர்யன் விலகியதாக படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் அவரிடம் சொல்லப்பட்ட கதைச்சுருக்கும் வேறு மாதிரி இருந்ததாகவும், தற்போது முழு வடிவம் பெற்றிருக்கும் திரைக்கதை வேறு மாதிரி இருந்ததாகவும், இதனால் அதிருப்தி அடைந்த ஆர்யன் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், ரெட் சில்லீஸ் நிறுவனத்துடன் 2 வருடங்களுக்கு முன்பே ஆர்யன் ஒப்பந்தம் செய்திருந்தார். சமீபத்தில் தான் ’தமாகா’ என்கிற த்ரில்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்போது மீண்டும் உடனடியாக ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்பதால்தான் இதிலிருந்து விலகியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இதனால் இரு தரப்பிலும் எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை என்றும், கார்த்திக் ஆர்யன் தான் வாங்கிய 2 கோடி ரூபாய் முன் பணத்தையும் திரும்பத் தந்துவிட்டதாகவும் தெரிகிறது.