வேகமெடுக்கும் ஷாரூக்கான் - அட்லி படத்தின் பணிகள்

By செய்திப்பிரிவு

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து, இந்தியில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் அட்லி. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடிக்கவுள்ளார் ஷாரூக்கான். இதற்கான பணிகளை நீண்ட மாதங்களாகக் கவனித்து வருகிறார் அட்லி. ஆனால், இன்னும் படம் தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை.

இதனால், அவ்வப்போது இந்தக் கூட்டணியின் படம் கைவிடப்பட்டது எனத் தகவல் வெளியானது. தற்போது அட்லி - ஷாரூக்கான் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. அட்லி கூறிய கதையின் இறுதி வடிவம் ஷாரூக்கானுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஷாரூக்கானுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார் அட்லி. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தையில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று பேசப்பட்டது. ஆனால், கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்களாகும் எனத் தெரிகிறது.

தற்போது மும்பையில் கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. ஆகையால் விரைவில் இந்திப் படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE