பயோபிக்: ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி கேட்ட பி.சுசீலா

By செய்திப்பிரிவு

தனது பயோபிக்கிற்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி கேட்டுள்ளார் பழம்பெரும் பாடகி பி.சுசீலா.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான '99 சாங்ஸ்' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16-ம் தேதி வெளியானது. ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படத்தை ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம்.மூவிஸ் ஐடியல் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தயாரிப்பான இந்தப் படத்துக்குக் கதாசிரியரும் அவரே ஆவார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பிரபலப்படுத்த ட்விட்டர் தளத்தின் ஸ்பேஸ் பிரிவில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். இதில் '99 சாங்ஸ்' பார்த்துவிட்டு பழம்பெரும் பாடகி பி.சுசீலா தன்னிடம் பேசியது குறித்தும் குறிப்பிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பி.சுசீலா பேசியது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது:

"மிகச்சிறந்த தென்னிந்தியப் பாடகி பி.சுசீலா அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, '99 சாங்ஸ்' படம் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டேன். அப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வந்துவிட்டது என்று கூறினேன். அவர் அப்படி என்றால் என்ன என்று கேட்டார். பிறகு, அவருடன் இருக்கும் அவருடைய சகோதரரிடம் எங்கள் படத்தின் தெலுங்குப் பதிப்பை ஓடிடியில் அவருக்குப் போட்டுக் காட்டுமாறு கூறினேன்.

படத்தைப் பார்த்தபிறகு என்னை மீண்டும் அழைத்த பி.சுசீலா, ‘மிகவும் நன்றாக இருக்கிறது’ என்று கூறினார். மேலும், ‘என்னுடைய கதை இதேபோன்றுதான் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா? என்று கேட்டார். அது மிகச்சிறந்த தருணம். ஏழு தலைமுறைகளாகப் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஆளுமைகளில் ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அந்த தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் என்னுடைய படத்தைப் பாராட்டுவது அருமையான விஷயம்".

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE