நஷ்டங்களைப் பற்றி நினைத்தால் அழுதுவிடுவேன்: போனி கபூர் வருத்தம்

'மைதான்' திரைப்படத்துக்காகப் போடப்பட்ட அரங்குகள் புயலால் சேதமடைந்ததைத் தொடர்ந்து தான் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார். ‘

அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மைதான்'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்துக்காக மும்பையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட மைதான அரங்குகளை அமைத்து படமாக்கி வந்தது படக்குழு. கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பினாலும், மழை எச்சரிக்கையாலும் இந்த அரங்குகள் அகற்றப்பட்டு படப்பிடிப்பும் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் அரங்குகளை அமைத்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த சூழலில் கடந்த 17ஆம் தேதி அன்று பெய்த கனமழையால் இந்த அரங்குகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை பெய்த அன்று அரங்கில் 40க்கும் அதிகமானோர் இருந்ததாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனவும் படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியிருக்கும் போனி கபூர், "மூன்றாவது முறை அரங்கங்கள் அமைத்திருக்கிறோம். தற்போது 70-80 சதவித அரங்குகள் நாசமடைந்துவிட்டன. நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் விஷயம் கொடூரமானது. யாரும் அது குறித்து எனக்கு மீண்டும் நினைவூட்ட வேண்டாம் என்று விரும்புகிறேன். எனது நஷ்டத்தைப் பற்றி, என் உணர்வுகளைப் பற்றி நினைக்க ஆரம்பித்தால் அழுதுவிடுவேன் என்று நினைக்கிறேன்.

திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி, செலவுகள் அதிகமாகி வருவது குறித்து நினைத்தால் மன அழுத்தம் வந்துவிடும். சேதமடைந்த மைதானத்தை நான் பார்க்கக்கூட விரும்பவில்லை. இந்தச் சூழலில் உற்சாகமாக இருக்க முயற்சிக்கிறேன். புயல் சமயத்தில் அந்த இடத்தில் 40-50 பேர் இருந்தனர். ஆனாலும் இந்த சேதத்தால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதில் சந்தோஷம்" என்று தன் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழில் அஜித்குமார் நாயகனாக நடிக்க 'வலிமை' திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதி கட்ட வேலைகளும் கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE