மாடலிங், ஆல்பம், விளம்பர படங்கள் என படிப்படியாக அடையாளம் பெற்று தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக கவனம் ஈர்த்து வருகிறார் அம்ரிதா. தற்போது முழு ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாததால், வீட்டில் அம்மாவுக்கு சமையல் உதவி, பிடித்தமான படங்கள் பார்ப்பது, நெருங்கிய தோழிகளுடன் செல்போனில் அரட்டை என உற்சாகமாக பொழுதுபோக்கியபடி இருந்தவருடன் ஒரு நேர்காணல்..
‘பிகில்’ படத்துக்கு பிறகு, தமிழில் அம்ரிதா பெரிதாக தென்படவில்லையே.
‘பிகில்’ முடிந்ததும் தெலுங்கில் சில வாய்ப்புகள் வந்தன. அவற்றை முடித்துவிட்டு இங்கு வந்தபோது, ஊரடங்கு நடவடிக்கைகள் அமலுக்கு வந்துவிட்டன. தவிர, அடுத்தடுத்து படம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என நான் நினைப்பது இல்லை.
இரண்டு, மூன்று நாயகிகள் நடிக்கும் படங்களில் அதிகம் காணமுடிகிறதே?
எனக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள கதையாக ஒருபோதும் நான் தேர்வு செய்வது இல்லை. நமக்கு அடையாளம் கிடைக்கிற மாதிரி கதாபாத்திரம் அமைந்தால் போதும். தமிழ், தெலுங்கில் மாறி மாறி கதைகள் கேட்கிறேன். கடந்த ஆண்டு தமிழில் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் நடித்தேன். ‘லிஃப்ட்’ படத்திலும் கவனம் செலுத்தினேன். இது தமிழில் என் அடுத்த படமாக
வெளிவரும். தெலுங்கில் ‘அர்ஜுனா பல்குனா’ என்ற ஒரு படம், பெயரிடப்படாத இன்னொரு படம் என 2 படங்கள் தயாராகி வருகின்றன.
‘லிஃப்ட்’ என்ன மாதிரியான படம்?
முழுக்க திகில் கலந்த த்ரில்லர் கதைக்களம். நான் இதுவரை ஏற்று நடிக்காத பின்னணி. விரும்பி ஏற்று நடித்த கதாபாத்தி
ரம். இன்னொரு சுவாரசிய விஷயம். இப்படத்தில், ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். உண்மையிலேயே, சினிமாவுக்கு வரும் முன்பு கார்ப்பரேட் கம்பெனியில்தான் வேலை பார்த்தேன். சென்னையில் இருந்த
நெருங்கிய தோழிதான் மாடலிங், விளம்பரப்படங்கள், ஆல்பம் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தார். பின்னர், ‘லிங்கா’, ‘தெறி’
போன்ற படங்களில் தோழி கதாபாத்திரங்களில் நடித்தேன். நிறைய ஆல்பங்களிலும் நடித்த பிறகே, நாயகி வாய்ப்பு வந்தது.
ஓடிடி தளத்தின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
இதுபோன்ற ஊரடங்கு காலகட்டங்களில் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். இந்த சூழலுக்கு ஓடிடி வரவேற்க வேண்டிய விஷ
யம். கரோனா முடிவுக்கு வந்ததும் தியேட்டரில் படம் பார்ப்பதுதான் நல்லது. கலகலப்பாக படம் பார்க்கும் அதன் சுகமே தனி!