மீண்டும் பரவும் கீர்த்தி சுரேஷ் திருமண வதந்தி

By செய்திப்பிரிவு

தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியானது. அது வதந்தி என்று தெரியவந்துள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் ரஜினியுடன் 'அண்ணாத்த', 'சாணிக் காயிதம்', தெலுங்கில் மகேஷ் பாபுடன் 'சர்காரு வாரி பட்டா', 'குட்லக் சகி', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'மரக்கர்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவருக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கமாகிவிட்டது. அதற்கு உடனடியாக அவருடைய தரப்பிலிருந்து மறுப்பும் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமண வதந்தி பரவி வருகிறது.

சென்னையைச் சேர்ந்த முன்னணித் தொழிலதிபர் ஒருவருடன் கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் பரவியது. முன்னணி நடிகை என்பதால், அதற்குள் திருமணமா என்று எண்ணினார்கள்.

இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் கேட்டபோது, "பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அடுத்து நடிப்பதற்குக் கதைகளும் கேட்டு வருகிறார். இப்போதைக்கு அவருடைய கவனம் முழுக்க நடிப்பில் மட்டுமே இருக்கிறது. திருமணம் குறித்த தகவல்கள் அனைத்தும் வதந்தியே" என்று தெரிவித்தார்கள்.

இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் திருமணச் செய்தி வெறும் வதந்திதான் என்பது மீண்டும் உறுதியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE