'ரக்த சரித்ரா'வில் நான் அதிகம் ஏமாற்றப்பட்டேன்: ராதிகா ஆப்தே 

By செய்திப்பிரிவு

'ரக்த சரித்ரா' திரைப்படத்தில் தனக்குக் குறைவான சம்பளம் கொடுத்து, தான் அதிக நேரம் காக்க வைக்கப்பட்டதாகவும், அதிகம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகவும் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ரக்த சரித்ரா'. விவேக் ஓபராய், ராதிகா ஆப்தே, சுதீப், சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த பரிடாலா ரவி என்கிற அரசியல்வாதியின் வாழ்க்கையைச் சொல்லும் கதை இது. இதில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

"நான் அந்தப் படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்ற எண்ணத்திலேயே இருந்தேன். அதிகம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். ஏனென்றால் எனக்குப் பெரிய சம்பளம் தரப்படவில்லை. ஒரே ஒரு படம் என்றார்கள். ஆனால், தமிழ், தெலுங்கு என இரண்டிலும் வசனங்கள் பேசினேன். படத்தில் பெரிய நட்சத்திரங்கள் இருந்தார்கள். படப்பிடிப்பு நேரத்துக்கு தொடங்கவே தொடங்காது. நான் என்றுமே நடிக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி யாரையும் நாடியதில்லை. எனவே ஏன் நேரமும், திறமையும் சரியாக உபயோகமாகாத நிலையில் எதற்கு படப்பிடிப்புத் தளத்தில் அவ்வளவு நேரம் பொறுமை காக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அந்தக் கட்டத்தில்தான் நான் சரியான தொழில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தேனா என்று எனக்குள் கேள்வி எழுந்தது. இப்படித்தான் இந்த வேலை நடக்குமா? என்று நினைத்தேன்.

இருந்தாலும் நான் ராம் கோபால் வர்மாவின் பெரிய ரசிகை. குறிப்பாக 'ரங்கீலா' மற்றும் 'சத்யா'. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடிகிற வாய்ப்பு இருக்கும் என்று ஆவலோடு இருந்தேன். ஒரு குழுவாக நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். அதேநேரம் தெரிந்தவர்களிடம் நன்றாக நடந்து கொள்வது, நமது நேரத்தை வீணடிப்பது என்றும் ஒரு பக்கம் நடந்தது. அந்த நேரத்தில் நான் துறைக்குப் புதிது. ஆனால் அந்த அனுபவம், நான் ஒதுக்கும் நேரம் மதிக்கப்பட வேண்டும் என்று என்னை உணரவைத்தது. அதன் பிறகு அதுகுறித்து நான் கடுமையாக இருக்க ஆரம்பித்தேன்" என்று ராதிகா ஆப்தே பேசியுள்ளார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் 'ரத்த சரித்திரம்' என்கிற பெயரில் இரண்டாம் பாகம் மட்டும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE