டப்பிங் யூனியன் முன்னாள் தலைவர் கரோனாவால் மரணம்

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த டப்பிங் யூனியன் முன்னாள் தலைவர் ஆர்.வீரமணி கரோனா பாதிப்பால் காலமானார்.

கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதமும் அதிமாகியுள்ளது. கரோனா பாதிப்பு திரைத்துறையிலும் தொடர் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இயக்குநர்கள் ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த், நகைச்சுவை நடிகர்கள் பாண்டு, நெல்லை சிவா, நடிகர் நிதீஷ் வீரா என அடுத்தடுத்த கரோனா மரணங்கள் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் டப்பிங் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்த ஆர்.வீரமணி கரோனா பாதிப்பால் காலமானார்.

இதுகுறித்து டப்பிங் யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்.வீரமணி பல வருடங்களாக டப்பிங் யூனியனில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்தவர். 2004-2006 வரை டப்பிங் யூனியனின் தலைவராகவும் இருந்தவர்.

அமரர் எம்.ஆர்.ராதாவின் நாடக கம்பெனியில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரசியல் கட்சி தொடங்கியபோது தன்னை மும்முரமாக அதில் ஈடுபடுத்திக் கொண்டவர். பல டப்பிங் கலைஞர்களை அறிமுகம் செய்தவர்.

அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். கரோனா பாதிப்பினால் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தவர் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதை அனைத்து டப்பிங் கலைஞர்கள் சார்பாகவும் ,டப்பிங் யூனியன் மற்றும அதன் தலைவர் "டத்தோ"ராதாரவி சார்பாகவும் மிக வருத்தத்தோடு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE