மீண்டும் இணையும் ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணி

By செய்திப்பிரிவு

'கோமாளி' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் தனது 25-வது படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜெயம் ரவி. இதனிடையே அஹ்மத் இயக்கத்தில் உருவாகவிருந்த படத்தின் பொருட்செலவு குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

'கோமாளி' படத்தின் வசூலைக் கணக்கில் கொண்டு, அஹ்மத் படத்தின் படப்பிடிப்பை வெளிநாட்டில் தொடங்கியது படக்குழு. ஆனால் கரோனா தொற்று காரணமான படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் ஜெயம் ரவிக்கு நாயகியாக டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். 'ஜன கண மன' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.

இந்த சூழலில் ‘ஜன கன மண’ படத்துக்கு முன்பாக மற்றொரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா தொற்றால் தற்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவுவதால் ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணியில் மற்றொரு படத்தை இந்தியாவிலேயே ஒரே கட்டமாக எடுத்து முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE