'நாயாட்டு' நடிகரைப் பாராட்டிய ராஜ்குமார் ராவ்

By செய்திப்பிரிவு

'நாயாட்டு' திரைப்படத்தில் நடித்த நடிகர் ஜோஜு ஜார்ஜை பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் இன்ஸ்டாகிராமில் பாராட்டியுள்ளார். இதை ஜோஜு ஜார்ஜ் பகிர்ந்துள்ளார்.

மார்டின் ப்ரக்காத் இயக்கத்தில் குஞ்சாகோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் 'நாயாட்டு'. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. படத்தின் திரைக்கதை, இயக்கம், நடிகர்களின் நடிப்பு என அத்தனையும் பாராட்டப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து, திரையரங்கில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டி வருகின்றனர். இதில் சில திரை நட்சத்திரங்களும் அடங்குவர்.

அப்படிப் படத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜின் நடிப்பை, பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் பாராட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஜோஜு ஜார்ஜுக்குத் தனிப்பட்ட முறையில் செய்தி பகிர்ந்திருக்கும் ராஜ்குமார், "என்னே ஒரு அற்புதமான நடிப்பு சார். படமும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நீங்கள் இன்னும் சிறக்க வேண்டும். இப்படியான அட்டகாசமான நடிப்பின் மூலம் தொடர்ந்து எங்களுக்கு உந்துதல் தாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஜார்ஜ், "எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நெகிழ்ந்துவிட்டேன். இது எனக்குப் பெரிய உற்சாகம் தருகிறது. மிக்க மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரிடமிருந்து உயர்ந்த பாராட்டு. என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியவில்லை. 'நாயாட்டு'வில் நடித்ததற்குக் கிடைத்த முதல் விருது இது. மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ராஜ்குமார் ராவ். 'நியூடன்', 'கை போ சே', 'ட்ராப்ட்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2013ஆம் ஆண்டு 'ஷாகித்' திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் (நடுவர் தேர்வு) என்கிற தேசிய விருதையும் பெற்றவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE