'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் 2 படங்கள்: ஸ்டூடியோ க்ரீன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'மூடர் கூடம்' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நவீனின் அடுத்த இரண்டு படங்களையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர் எனப் பல பொறுப்புகளை ஏற்று 'மூடர் கூடம்' படத்தை வெளியிட்டவர் நவீன். இந்தப் படத்துக்குக் கிடைத்த நல்ல வரவேற்புக்குப் பின் 'அலாவுதீனும் அற்புதக் கேமராவும்' என்கிற படத்தை நவீன் தயாரித்து, இயக்கி, நடித்தார்.

தொடர்ந்து விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் 'அக்னிச் சிறகுகள்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதற்கு நடுவில் சமுத்திரக்கனி நடிப்பில் 'கொளஞ்சி' திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டார்.

தற்போது இவரது அடுத்த இரண்டு படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று (மே 14) அவர் பிறந்த நாள் என்பதாலும், ஈகைத் திருநாளை முன்னிட்டும் இந்த அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் தரப்பு வெளியிட்டுள்ளது.

"இந்த ஈகைத் திருநாள் அன்று, இயக்குநர் நவீனுடன் இரண்டு படங்களில் இணைகிறோம் என்பதைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் அவர் இயக்கும் 'அக்னிச் சிறகுகள்' படத்துக்குப் பின் இது நடக்கும். அவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்" என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE