அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ’புஷ்பா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு வனப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். தெலுங்கில் அவர் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இது.
தற்போது இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்துவந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே மிச்சம் உள்ளன. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்குப் படத்தின் கதையைச் சொல்லவேண்டிய தேவை இருப்பதால் இந்த முடிவைத் தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
» ஊரடங்கை மீறி நடக்கும் திரைப்படப் படப்பிடிப்புகள்: நடவடிக்கை எடுக்க சாந்தினி வேண்டுகோள்
» கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் ரஜினிகாந்த்: ட்விட்டரில் மகள் சவுந்தர்யா பகிர்வு
இதுகுறித்துப் பேசிய மைத்ரி மூவி மேக்கர்ஸின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர், "நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று, வளர்ந்து நின்றிருப்பதால், படத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால்தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம். 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம்.
சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால் இந்தக் கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தனர்
ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மரத் திருட்டைச் சுற்றி இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. முதல் பாகம் 2021 ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.