கரோனா நோயாளிகளுக்காக பிரம்மாண்ட அரங்கை வழங்கிய 'ராதே ஷ்யாம்' படக்குழு

By செய்திப்பிரிவு

'ராதே ஷ்யாம்' படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கு ஒன்றை கரோனா நோயாளிகளுக்காகப் படக்குழுவினர் வழங்கியுள்ளனர்.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை இத்தாலி நாட்டில் படமாக்கியுள்ளது படக்குழு. மேலும், சில காட்சிகளை ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துப் படமாக்கினார்கள். இப்படம் வரும் ஜூலை 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘ராதே ஷ்யாம்’ படத்துக்காக 70களின் இத்தாலி நகரைப் போல ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் போடப்பட்டிருந்தன. அதில் மருத்துவமனையைப் போல அமைக்கப்பட்டிருந்த ஒரு அரங்கைப் படக்குழுவினர் கரோனா நோயாளிகளுக்காகத் தனியார் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.

அத்துடன் 50 பெரிய படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கவச உடைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் படக்குழுவினர் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் 9 லாரிகள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE