மது அருந்தும் காட்சிகளை எப்படி எடுப்பீர்கள்?- 'மகாநடி' இயக்குநரிடம் கேள்வி கேட்ட கீர்த்தி சுரேஷ்

By செய்திப்பிரிவு

'மகாநடி' இயக்குநர் நாக் அஸ்வினிடம் தான் கேட்க நினைத்த கேள்விகள் அடங்கிய குறிப்புகளை நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் வெளியானது. 2018-ம் ஆண்டு வெளியான இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், பத்திரிகையாளராக சமந்தா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 2018-ம் ஆண்டு மே 9-ம் தேதி இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி சுரேஷுக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அவரது திரையுலக வாழ்க்கையை மாற்றிய படம் இது.

இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் தன்னிடம் கதை சொல்ல வந்தபோது, அவரிடம் தான் கேட்க நினைத்த கேள்விகளை குறிப்புகளாக எழுதி வைத்தார் கீர்த்தி சுரேஷ். கடந்த மே 09 அன்று 'மகாநடி' வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி அந்தக் குறிப்புகளைத் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கீர்த்தி பகிர்ந்துள்ளார்.

இந்தக் குறிப்புகளில், 'மது அருந்தும் காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறீர்கள்?' 'படத்தில் வயதான தோற்றத்துக்கான காட்சிகள் எத்தனை நேரம்?' 'கர்ப்பமான தோற்றம் இருக்கிறதா? எடை கூடுவது, இழப்பது அவசியமா?' என்று சில கேள்விகளை கீர்த்தி எழுதியுள்ளார்.

இதைப் பகிர்ந்து இயக்குநர் நாக் அஸ்வினைக் குறிப்பிட்டிருக்கும் கீர்த்தி, "நாகி, நான் எதைத் தேடிப் பிடித்திருக்கிறேன் என்று பாருங்கள்! நீங்கள் கதை சொன்னபோது முதன்முதலில் நான் எழுதிய குறிப்புகள். என்ன ஒரு அற்புதமான பயணமாக இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE