என் உடலில் இருக்கும் கரோனாவை அழிப்பேன்: நடிகை கங்கணா ரணவத் பகிர்வு

By செய்திப்பிரிவு

தனக்குக் கரோனா தொற்று இருப்பதாக நடிகை கங்கணா ரணவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் சர்ச்சைக் கருத்துகளுக்குப் பிரபலமானவர் கங்கணா ரணவத். அவ்வப்போது அதிரடியாக ஏதாவது பகிர்ந்து சிக்கலில் சிக்குவதும் அவருக்கு வாடிக்கையே. சில சமயங்களில் கங்கணாவின் சகோதரி ரங்கோலியும் தன் பங்குக்கு சர்ச்சைகளைக் கிளப்புவார். இதனால் இருவரும் சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்தித்துள்ளனர். சமீபத்தில் கூட கங்கணாவின் சர்ச்சைக் கருத்தைக் காரணம் காட்டி ட்விட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடங்கியது.

இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார் கங்கணா. சனிக்கிழமை காலை தனக்குக் கரோனா தொற்று உறுதியானது குறித்து கங்கணா பகிர்ந்துள்ளார்.

"எனக்கு உடல் சோர்வாக, பலவீனமாக இருந்தது. கண்களில் எரிச்சல் இருந்தது. ஹிமாச்சல் கிளம்பலாம் என்று இருந்தேன். எனவே நேற்று பரிசோதனை செய்து கொண்டேன். இன்று எனக்குக் கோவிட் தொற்று இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. என்னைத் தனிமைபடுத்திக் கொண்டுவிட்டேன். இந்த கிருமி என் உடலில் கொண்டாட்டமாக இருந்து வருவது எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை.

இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால் அதை நான் அழிப்பேன். மக்களே, எதற்கும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியைத் தராதீர்கள். நீங்கள் பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும். வாருங்கள் இந்த கோவிட்-19 கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களை பயமுறுத்திவருகிறது. ஹர ஹர மஹாதேவ்" என்று கங்கணா இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE