தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடந்தது. இதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின் இன்று (மே 7) காலை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சூர்யா ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"'முடியுமா நம்மால்‌?' என்பது தோல்விக்கு முன்பு வரும்‌ தயக்கம்‌...

'முடித்தே தீருவோம்‌!' என்பது வெற்றிக்கான தொடக்கம்‌...

- 'முத்தமிழ்‌ அறிஞர்‌' கருணாநிதி.

'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள்‌ வரிசைகட்டி முன்நிற்க, சட்டப்பேரவை தேர்தலில்‌ மகத்தான வெற்றி பெற்று 'மக்களின்‌ முதல்வராக' பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம்‌ நிறைந்த வாழ்த்துகள்‌.

சுவாசிப்பதற்கு 'உயிர்‌ காற்று'கூட கிடைக்காமல்‌ மக்கள்‌ அல்லல்படுகிற இந்த பேரிடர்‌ காலத்தில்‌, நீங்கள்‌ ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள்‌ ஆட்சியில்‌ அனைத்து துறைகளிலும்‌ தமிழகம்‌ வளர்ச்சியடையும்‌ என்று நம்புகிறோம்‌. தங்களுக்கும்‌, ஆற்றலும்‌ அனுபவமும்‌ நிறைந்த தமிழக அமைச்சர்‌ பெருமக்களுக்கும்‌ மனப்பூர்வமான வாழ்த்துகள்‌. தமிழகத்‌தின்‌ உரிமைகளை மீட்கத் தமிழர்களின்‌ ஒருமித்த குரலாக இனி உங்கள்‌ குரல்‌ ஒலிக்கட்டும்‌"

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE