25 குடும்பங்களுக்குக் கண்களாக விளங்கியவர்: கோமகன் மறைவுக்கு சேரன் இரங்கல்

By செய்திப்பிரிவு

கோமகன் மறைவுக்கு இயக்குநர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான படம் 'ஆட்டோகிராஃப்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்றது கோமகன் இசைக்குழு. முழுக்கப் பார்வையற்றவர்களால் தொடங்கப்பட்ட இந்த இசைக்குழு, 'ஆட்டோகிராஃப்' படத்துக்குப் பிறகு மிகவும் பிரபலமானது. அந்தப் பாடலின் இறுதியில் கோமகனும் உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பார்.

கடந்து இரண்டு வாரங்களுக்கு முன்பாக கோமகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று (புதன்கிழமை) நள்ளிரவில் கோமகனின் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் கோமகனின் மறைவுக்கு இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''வார்த்தைகள் இல்லை. மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்குக் கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்தச் செய்தி நெஞ்சை நொறுக்கியது..
கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்''.

இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE