நடிகை ஆண்ட்ரியாவுக்குக் கரோனா: இன்ஸ்டாகிராமில் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று காரணமாக தான் ஒரு வாரமாக வீட்டுத் தனிமையில் இருப்பதாக நடிகை ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளார்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தேசிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடிகை ஆண்ட்ரியா தனக்கு கோவிட்-19 தொற்று உறுதியானது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பியானோ வாசித்து, ஒரு பாடலைப் பாடியபடி காணொலி ஒன்றை ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளார். இதோடு, "அன்பார்ந்த அனைவருக்கும், கடந்த வாரம் எனக்குக் கோவிட்-19 தொற்று உறுதியானது. என்னிடம் பேசிய, என்னைப் பார்த்துக் கொண்ட எனது நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி. சமூக ஊடகங்களிலிருந்து இடைவேளை எடுத்துக் கொண்டேன்.

தொற்று ஒரு காரணம், இன்னொரு பக்கம் நமது தேசம் இவ்வளவு மோசமான கரோனா நெருக்கடியைச் சந்திக்கும் போது என்னப் பதிவிட வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை என்பது இன்னொரு காரணம்.

எப்போதும் போல, எனக்கு என்னப் பேசுவது என்று தெரியாத சமயங்களில் நான் என் மனமார பாடுவேன். அதுவே எல்லாவற்றையும் சொல்லிவிடும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும். இந்த தொற்று காலம் முடிந்து நாம் மீண்டும் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா நடிப்பில் 'அரண்மனை 3', 'பிசாசு 2' ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE