கோவிட்-19 பாதிப்பில் தந்தையை இழந்த இளைஞருக்கு உதவிய சல்மான் கான்

By செய்திப்பிரிவு

கோவிட்-19 பாதிப்பில் தனது அப்பாவை இழந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞருக்கு சல்மான் கான் உதவியுள்ளார்.

கடந்த வருடம் கரோனா நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்தே பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் எண்ணற்ற நல உதவிகளைச் செய்து வருகின்றனர். சல்மான் கான் தன் பங்குக்குப் பல உதவிகளைச் செய்து வந்தார். முன்களப் பணியாளர்களுக்கு ஒரு லட்சம் சானிடைசர்கள், கரோனா பாதிப்பால் வருவாய் இழந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் எனத் தொடர்ந்து உதவிகள் செய்தார்.

மேலும், தனது சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் அவ்வப்போது, மக்களுக்கு கரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் செய்து வந்தார். தற்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, கோவிட்-19 பாதிப்பில் தனது தந்தையை இழந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கு உதவி செய்துள்ளார்.

சல்மான் கானுடன் சேர்ந்து நல உதவிகள் செய்து வரும் யுவசேனாவின் தலைவர் ராகுல் கனால் இதுகுறித்துப் பேசியுள்ளார். அந்த இளைஞருக்குத் தேவையான உணவுப் பொருட்கள், கல்விக்குத் தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை சல்மான் தந்துள்ளார். மேலும், தொடர்ந்து அந்த இளைஞரின் வாழ்க்கைக்குத் தேவையான உதவிகளை சல்மான் தொடர்ந்து செய்யப்போகிறார் என்று ராகுல் கூறியுள்ளார்.

சல்மான் கான் நடிப்பில் ‘ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. மே 13ஆம் தேதியன்று திரையரங்குகளிலும், ஜீ5 ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE