நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
கடந்த 1-ம் தேதி முதல் முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. கடந்த 2-ம் தேதி 3.92 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நாள் தோறும் உயிரிழப்புகளும் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் பிரபல நடிகை பியா பாஜ்பாயின் சகோதரர் மருத்துவமனையின் படுக்கை கிடைக்காததால் உயிரிழந்துள்ளார்.
‘கோ’, ‘கோவா’, ‘ஏகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பியா பாஜ்பாய் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சகோரர் இறந்து கொண்டிருப்பதாகவும், உ.பி மாநிலம் ஃபரூகாபாத் பகுதியில் வென்டிலேட்டருடன் கூடிய படுக்கை இருந்தால் தெரியப்படுத்தவும் என்று தொலைபேசி எண்ணையும் பகிர்ந்திருந்தார்.
» தீபிகா படுகோனுக்கு கரோனா தொற்று உறுதி
» கடினமான சூழலிலிருந்து மீண்டு வர ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம்: அனுஷ்கா பகிர்வு
மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரையும் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவரின் சகோதரருக்கு எங்கும் வென்டிலேட்டருடன் கூடிய படுக்கை கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று ட்விட்டரில் பியா பாஜ்பாய் தனது சகோதரர் இறந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். பியாவின் சகோதரர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.