தீபிகா படுகோனுக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

கடந்த 1-ம் தேதி முதல் முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தைத் தாண்டி அதிர்ச்சி அளித்தது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா ஒட்டுமொத்த பாதிப்பு 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது.

பாலிவுட்டைச் சேர்ந்த பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் நடிகை தீபிகா படுகோனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக தீபிகா பெங்களூருவில் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபிகாவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தற்போது நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று தீபிகா படுகோனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து தீபிகாவோ, ரன்வீரோ தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இன்னும் உறுதி செய்யவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE