'கர்ணன்' படத்தில் நட்டியின் நடிப்பைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், நட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்தனர்.
ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வரும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் பணிபுரிந்தனர். இந்தப் படத்துக்குப் பல்வேறு திரையுலகினரும் பெரும் பாராட்டு தெரிவித்தனர். 'கர்ணன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தனுஷ் - மாரி செல்வராஜ் இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளனர்.
'கர்ணன்' படத்தில் வில்லத்தனமான காவல்துறை அதிகாரியாக நடித்தார் நட்டி. அவருடைய நடிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தார்கள். தற்போது இயக்குநர் பாரதிராஜாவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
» டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்
» மேற்கு வங்க வன்முறை தொடர்பாக ட்வீட்: கங்கணாவின் ட்விட்டர் கணக்கு தற்காலிக முடக்கம்
இது தொடர்பாக நட்டி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இன்று இரவு உறக்கம் வருமா என்று தெரியவில்லை. சில நிமிடங்களுக்கு முன்னால் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.. என்ன பாடி லாங்வேஜ்டா.. அசத்திட்டடா.. நீ ஒரு பன்முகத் திறமையாளர். கர்ணனில் உன் உழைப்பு பாராட்டுக்குரியது என்றார்.
நன்றி ஆசானே. வணங்குகின்றோம்.
அனைத்துப் பெருமைகளும் மாரி செல்வராஜுக்குரியது.. நன்றி கலைப்புலி தாணு சார்.. நன்றி தனுஷ் சார்.. சக நடிகர்கள்..சக தொழில் நுட்ப வல்லுநர்கள்..."
இவ்வாறு நட்டி தெரிவித்துள்ளார்.