என் மீது வழக்கு போடப்படும் என்று பயந்தேன் - ‘ஜஸ்டிஸ் லீக்’ குறித்து ஸ்னைடர் பகிர்வு

2017-ம் ஆண்டு டிசி காமிக்ஸின் 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் வெளியானது. ஏற்கெனவே டிசி சினிமா உலகில் 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸாக் ஸ்னைடர், 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின்போது ஸ்னைடரின் மகள் தற்கொலை செய்து கொண்டதால் ஸ்னைடரால் படத்தின் வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போனது.

படத்தில் சில கூடுதல் காட்சிகளைச் சேர்க்க, 'அவெஞ்சர்ஸ்' முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜாஸ் வீடன் உதவியை ஸ்னைடர் ஏற்கெனவே நாடியிருந்ததால், வீடனை வைத்துப் படத்தை முடிக்க வைத்தது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். தொடர்ந்து படத்தின் சில பகுதிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்யப்பட்டன. படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.

ஆனால், வெளியான படம், அசல் இயக்குநர் ஸாக் ஸ்னைடரின் பார்வையிலிருந்து விலகி விட்டதாகவும், ஸ்னைடர் எடுத்து முடித்த பதிப்பை வார்னர் பிரதர்ஸ் வெளியிட வேண்டும் என்றும் உலகம் முழுவதும் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். #ReleaseTheSnyderCut என்ற கோரிக்கை ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்பட்டு ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இதனைக் கருத்தில் கொண்டு ஸ்னைடர் எடுத்த 'ஜஸ்டிக் லீக்' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டது வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம்.

இந்நிலையில் இப்படம் குறித்து அவர் கூறியதாவது:

‘ஜஸ்டிஸ் லீக்’ புதிய படத்துக்கான ஐடியா என்னுடைய மனதில் தயாராக இருந்தாலும், அது நிறைவேறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் என்னை அடக்குவதற்காக தயாரிப்பு நிறுவனம் என் மீது வழக்கு தொடருமோ என நான் பயந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய ரசிகர்கள் எனக்கு உறுதுனையாக இருந்தனர்.

இவ்வாறு ஸ்னைடர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE