நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
கடந்த 1-ம் தேதி முதல் முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. கடந்த 2-ம் தேதி 3.92 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நாள் தோறும் உயிரிழப்புகளும் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 3417 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ நடிகர் சந்தீப் கிஷன் சந்தீப் கிஷன் முன்வந்துள்ளார்.
தமிழில் ‘மாநகரம்’ ‘மாயவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். நேற்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த சவாலான காலகட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக கரோனா தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால், அவர்களைப் பற்றி கீழ்கண்ட இ மெயில் முகவரியில் தெரியப்படுத்துங்கள்.
நானும் என்னுடைய குழுவினரும் எங்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் அது போன்ற குழந்தைகளின் அடுத்த இரண்டு ஆண்டுக்காக உணவு மற்றும் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம். இது சோதனைக் காலம். இதில் மனிதர்களாக ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதே முக்கியம். கீழ்கண்ட முகவரிக்கு தகவல்களை அனுப்பவும்:
sundeepkishancovidhelp@gmail.com (sic)
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.