கடும் போட்டியில் அயராது உழைத்து வெற்றி: மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து

By செய்திப்பிரிவு

கடும் போட்டியில் அயராது உழைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுகவின் வெற்றிக்குத் தொலைபேசி வாயிலாக மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து, அனைத்துத் தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்".

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE