எங்களை விட உற்சாகமாக இருந்தவர் செல்லதுரை தாத்தா: 'ஹிப் ஹாப்' ஆதி பகிர்வு

By செய்திப்பிரிவு

மறைந்த நடிகர் செல்லதுரை, இளைஞர்களை விட அதிக உற்சாகத்தோடு இருந்தவர் என்று 'ஹிப் ஹாப்' ஆதி பகிர்ந்துள்ளார்.

‘கத்தி’, ‘தெறி’,‘மாரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தவர் செல்லதுரை. ‘மாரி’ படத்தில் இவர் பேசும் ‘அப்படியா விஷயம்’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இன்று இவர் காலமானார். இவருக்கு வயது 84.

அவரோடு நடித்த பல்வேறு நடிகர்களும் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 'நட்பே துணை' திரைப்படத்தில் 'ஹிப் ஹாப்' ஆதியோடு சேர்ந்து ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் செல்லதுரை நடித்திருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த ஒரு வீடியோ ஒன்றையும் சேர்த்து அவர் குறித்து 'ஹிப் ஹாப்' ஆதி பகிர்ந்துள்ளார்.

"ஒவ்வொரு நாளும் நட்பே துணை படப்பிடிப்பில் செல்லதுரை தாத்தாவோடு சேர்ந்து நாங்கள் உற்சாகமாக நேரம் செலவிடுவோம். 'நான் இருக்குற வரைக்கும் நடிச்சிட்டே இருக்கணும்' என்று அடிக்கடி சொல்வார். 'சிங்கிள் பசங்க' பாடலின் படப்பிடிப்பு பின்னிரவில் முடிந்த பிறகு அவர் கிளம்புவதற்கு முன் எடுத்த வீடியோ இது.

நாங்கள் அனைவரும் சோர்வாக இருந்தோம். அவர் முழு உற்சாகத்தோடு இருப்பார். நடிப்பின் மீது பேரார்வம் கொண்டிருந்தார். செல்லதுரை தாத்தாவின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று 'ஹிப் ஹாப்' ஆதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE