உழைப்பினால் உயரம் தொட்டவர்: இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். இந்நிலையில், இன்று (ஏப். 30) அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருடைய மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

"திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நிழற்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என தன் உழைப்பினால் உயரம் தொட்டவர். அயன், கோ, மாற்றான், கவண் உட்பட பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கிய சிறந்த படைப்பாளியான அவர், தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE