என்றென்றும் நினைவில் இருப்பீர்கள் - கே.வி.ஆனந்த் மறைவுக்கு அல்லு அர்ஜுன் இரங்கல்

By செய்திப்பிரிவு

இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிசக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைந்துவிட்டார் என்ற துக்க செய்தியுடன் கண் விழிக்க நேரந்தது. அற்புதமான ஒளிப்பதிவாளர், புத்திசாலித்தனமான இயக்குநர், அருமையான மனிதர். சார், நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் சார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் பின்னர் 'கனா கண்டேன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘அயன்’, ‘கோ’, ‘கவன்’ ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE