அதர்வாவின் 'தள்ளிப் போகாதே' திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

By செய்திப்பிரிவு

கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் 'தள்ளிப் போகாதே’ திரைப்படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

'பூமராங்' படத்தைத் தொடர்ந்து, ஒரே சமயத்தில் இரண்டு படங்களை இயக்கி வந்தார் இயக்குநர் கண்ணன். அதர்வா நடிக்கும் 'தள்ளிப் போகாதே', சந்தானம் நடிக்கும் 'பிஸ்கோத்' ஆகிய படங்களில் மாறிமாறி பணிபுரிந்து வந்தார்.

இரண்டு படங்களுமே கடந்த வருடம் முடிந்துவிட்டன. 'பிஸ்கோத்' வெளியாகி தோல்வியடைந்த நிலையில் 'தள்ளிப் போகாதே' திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது வெளியாகவில்லை. தற்போது படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தணிக்கையில் கிடைத்துள்ளதாக இயக்குநர் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'நின்னு கோரி' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'தள்ளிப் போகாதே' என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒளிப்பதிவாளராக சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக கோபி சுந்தர், பாடல்கள், வசனம் கபிலன் வைரமுத்து, எடிட்டராக செல்வா ஆர்.கே.ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

தற்போது திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக ஏதுவான சூழல் இல்லை என்பதால் 'தள்ளிப் போகதே' படம் ஓடிடியில் வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இதை இயக்குநர் கண்ணன் மறுத்துள்ளார். படம் கண்டிப்பாகத் திரையரங்கில்தான் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE