பல்வேறு கட்களுடன் முடிவு பெற்ற 'அடங்காதே' தணிக்கை

By செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'அடங்காதே' படத்துக்குப் பல்வேறு வெட்டுகளுடன் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், மந்த்ரா பேடி, சுரபி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'அடங்காதே'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பல மாதங்களாகவே இந்தப் படம் தயாரிப்பிலேயே இருக்கிறது.

படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வந்தன. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் இந்தப் படத்தின் வெளியீடு பலமுறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

தற்போது 'அடங்காதே' படத்தின் தணிக்கைப் பணிகளை முடித்துவிட்டது படக்குழு. பல்வேறு வெட்டுகளுடன் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் ஷண்முகம் முத்துசுவாமி தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"அன்பைத் தவிர வேறெதற்கும் அடங்கிப் போவதில்லை என்பதில் இப்போதும் உறுதியாகவே இருக்கிறேன். 5 ஆண்டுகால தொடர் போராட்டம். வழி நெடுகிலும் அள்ளி அணைத்து ஆரத்தழுவிய நண்பர்கள், தம்பிகள், அண்ணன்கள், தங்கைகள், சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி.

திரைப்படத் தணிக்கைத் துறை படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியது. தடைகளைப் பார்த்துப் பழகிய எமக்கு அதுவும் சவாலாக இல்லை. அரசியல் பேசியே தீருவோம்... நீங்கள் எந்த கத்தியைக் கொண்டு வந்தாலும். கணக்கிலடங்கா வெட்டுகளுடன் 'அடங்காதே' திரைப்படம். விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும்".

இவ்வாறு ஷண்முகம் முத்துசுவாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE