‘கர்ணன்’ படத்தைப் பார்த்த நடிகர் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜை வீடு தேடிச் சென்று பாராட்டியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் கர்ணன் நிகழ்த்தியிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் விக்ரம் நேராக மாரி செல்வராஜின் வீடு தேடிச் சென்று அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
» கரோனாவிலிருந்து குணமடைந்தார் சுந்தர். சி
» 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் 'மதயானைக் கூட்டம்' கூட்டணி
'கர்ணன்' படத்துக்குப் பிறகு, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார்.