இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷுக்கு ‘நடிப்பு கர்ணா’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் கர்ணன் நிகழ்த்தியிருக்கிறது.
இந்நிலையில் கர்ணன் படத்தைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
‘கர்ணன்’ பேசும் உண்மை வலி மிகுந்தது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். மாரி செல்வராஜின் எழுத்தை தேனி ஈஸ்வர், செல்வா, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வேறு தளத்துக்கு கொண்டு உயர்த்தியுள்ளனர். தனுஷின் நடிப்பு ‘இன்னும் இவரிடம் கொடுக்க எவ்வளவு இருக்கிறது’ என்று நம்மை ஆச்சர்யம் கொள்ளச் செய்கிறது. ‘நடிப்பு கர்ணா’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடி-யில் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.