சூர்யாவை இயக்கும் மாரி செல்வராஜ்?

By செய்திப்பிரிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி வதந்திதான் என்பது தெளிவாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், யோகி பாபு, நட்ராஜ், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் 'கர்ணன்' படக்குழுவினரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளனர்.

'கர்ணன்' படத்துக்குப் பிறகு, பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 'கர்ணன்' வெற்றியால் மீண்டும் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு மாரி செல்வராஜை ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார் தாணு எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாயகனாக சூர்யாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்தபோது, "பாண்டிராஜ் இயக்கி வரும் படம், தா.செ.ஞானவேல் இயக்கி வரும் படம், சிவா இயக்கவுள்ள படம் மற்றும் 'வாடிவாசல்' ஆகிய படங்களில் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. அதற்குப் பிறகு எந்தவொரு புதிய படத்திலும் சூர்யா இதுவரை ஒப்பந்தமாகவில்லை. மாரி செல்வராஜ் படம் தொடர்பாகப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE