'கர்ணன்' படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூலால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், வசூல் ரீதியாக எப்படியிருக்குமோ என்று படக்குழுவினருக்கு லேசான பயம் இருந்தது. ஏனென்றால் ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்தது தமிழக அரசு.
இந்த அறிவிப்பினால் 'கர்ணன்' படத்தின் வசூலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் படக்குழுவினர் உற்சாகமாகியுள்ளனர். தமிழகத்தில் முதல் மூன்று நாட்களில் 23 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது 'கர்ணன்'. முதல் நாளில் ரூ.10 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. அதற்கு அடுத்து 50% இருக்கைகளுக்கு அனுமதியால் வசூல் குறைந்துள்ளது. 100% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதியிருந்தால், கண்டிப்பாகப் பெரிய வசூல் சாதனையை 'கர்ணன்' நிகழ்த்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.