2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்திருந்தாலும் 2018ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமானார் ராஷ்மிகா. தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
நான் சினிமாத் துறைக்கு புதிது என்பதால் நான் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள் எப்படி ரசிகர்களை சென்றடைகின்றன என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். என்னைp பொறுத்தவரை நான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் நான் வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கிறேன். காரணம் ஒரே மாதிரியான கதையில் இருமுறை நடிப்பதை நான் விரும்புவதில்லை. அது ‘கீதா கோவிந்தம்’ ஆகட்டும், ‘மிஷன் மஜ்னு’ ஆகட்டும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். நான் தொடர்ந்து என்னை ஆச்சர்யப்படுத்த விரும்புகிறேன்.
» கரோனா தொற்று பாதிப்பு: மகாபாரதம் தொடரில் நடித்த சதீஷ் கவுல் மறைவு
» இயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று- தனியார் மருத்துவமனையில் அனுமதி
என்னைப் பொறுத்தவரை நான் நடித்த படங்களை பிற மொழி பேசும் மக்கள் சப்டைட்டிலுடன் பார்க்கின்றனர். நான் நடித்த ‘டியர் காம்ரேட்’ படம் சப்டைட்டிலுடன் இந்தியில் 100 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.