வாழ்த்திய விஜய் சேதுபதி; நெகிழ்ந்த மாரி செல்வராஜ் 

'கர்ணன்' படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி, ''அற்புதமான படம். நல்லா வருவே. லவ் யூ'' என்று இயக்குநர் மாரி செல்வராஜை வாழ்த்தியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன், ஜி.எம்.குமார், சண்முகராஜன், சுபத்ரா, 'பூ' ராமு, ஜானகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நேற்று (ஏப். 9) ‘கர்ணன்’படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ‘கர்ணன்’ படத்தைப் பாராட்டியுள்ளனர்.

இதனிடையே, படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்காக 'கர்ணன்' படத்தின் சிறப்புக் காட்சி சென்னை, அண்ணா நகரில் உள்ள பிவிஆர் திரையரங்கில் திரையிடப்பட்டது. படம் பார்த்து முடித்ததும் விஜய் சேதுபதி, மாரி செல்வராஜின் கையில் முத்தமிட்டு தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

''அற்புதமான படம். மனசார சொல்றேன். நல்லா வருவே. லவ் யூ'' என்று விஜய் சேதுபதி தெரிவித்தார். இதனால் இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ந்து போனார்.

'' 'கர்ணன்' அற்புதமான படம். தவறவிட வேண்டாம்'' என்று தன் சமூக வலைதளப் பக்கத்திலும் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE