‘ஜகமே தந்திரம்’ நாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

‘ஜகமே தந்திரம்’ படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் புதிதாக 1,45,384 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 794 பேர் பேர் பலியாகியுள்ளனர்.

திரை பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கார்த்திக் ஆர்யன், ஆமிர் கான், கோவிந்தா, பூமி பெட்னேகர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மலையாளத்தில் ‘மாயநதி’ மற்றும் தமிழில் தனுஷுடன் ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''தற்போது நீங்கள் ஒரு கரோனா நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி என அனைத்தையும் கடைப்பிடித்து வந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் ஒரு சிறு சோர்வு என்னுடைய இயல்பு வாழ்க்கையை பாதித்துவிட்டது.

தற்போது நுரையீரல் திறனை அதிகரிக்க யோகா செய்து கொண்டிருக்கிறேன். என் பெற்றோருடன் பால்கனி வழியே பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே, முகக்கவசம் அணியுங்கள், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்''.

இவ்வாறு ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE