'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார் ரஜினி.
சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, அங்கு கரோனா பரவலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. அதில் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியுள்ளது படக்குழு. தற்போது ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் போடப்பட்டுள்ள அரங்கில் மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
» கரோனா அறிகுறிகளுடன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி
» முதற்கட்ட தடுப்பூசி போட்ட பின்பும் நக்மாவுக்கு கரோனா தொற்று
இதில் கலந்து கொள்வதற்காக ரஜினி இன்று (ஏப்ரல் 8) காலை தனி விமானத்தில் கிளம்பி ஹைதராபாத் சென்றார். அங்கு முன்பைவிட கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. கடந்த முறை நடந்த தவறுகள் எதுவுமே இந்த முறை நடைபெறக் கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருக்கிறது படக்குழு.
ஹைதராபாத் படப்பிடிப்புடன் 'அண்ணாத்த' படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைகிறது. அதனை எடிட் செய்து முடித்த பிறகே அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்துத் திட்டமிடவுள்ளது படக்குழு.
அனைத்து இறுதிக்கட்டப் பணிகளையும் முடித்து, 'அண்ணாத்த' படத்தை தீபாவளிக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.