கரோனா அறிகுறிகளுடன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

கரோனா அறிகுறிகளுடன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். இவர் ரஜினி, கமல் ஆகியோரது வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர். இதுவரை 72 படங்களை இயக்கியுள்ளார். இதில் ரஜினியை வைத்து மட்டும் 25 படங்களை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியை கமர்ஷியல் நாயகனாக மாற்றியதில் எஸ்.பி.முத்துராமனுக்கு முக்கியப் பங்கு உண்டு.

1995-ம் ஆண்டுக்குப் பிறகு எஸ்.பி.முத்துராமன் எந்தவொரு படமும் இயக்கவில்லை. சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் விழாக்களில் தவறாமல் கலந்துகொள்ளும் பழக்கமுடையவர். இவருக்கு நேற்று (ஏப்ரல் 7) உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு எஸ்.பி.முத்துராமனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். தற்போது அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எஸ்.பி.முத்துராமன் உடல்நிலை குறித்து மெட்வே மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கரோனா அறிகுறிகளுடன் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மருத்துவமனையின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது".

இவ்வாறு மெட்வே மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.முத்துராமன் பூரண நலம்பெற்று சகஜ நிலைக்குத் திரும்ப திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE